27.8 C
Colombo
Friday, August 21, 2026

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் என்பது அமைப்பாகவே இருக்கும். அதில் இருக்கும் நபர்கள் மாறிச் செல்லலாம். அதன் அமைப்புக்காக உருவாக்கப்பட்ட சின்னத்தையோ கடிதத் தலைப்பையோ தனி நபர்கள் உரிமை கோரமுடியாது என
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளராக புதிதாக தெரிவு செய்யப்பட்ட
சிவானந்தன் ஜெனிற்றா தெரிவித்தார்.

 

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் இன்று தெரிவு செய்யப்பட்டது.

இதன்படி வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவராக
யோகராசா கனகரஞ்சினியும் செயலாளராக சிவானந்தன் ஜெனிற்றாவும் உப தலைவராக வல்லிபுரம் அமலநாயகியும் உப செயலாளராக செபஸ்டியாம் தேவியும் பொருளாளராக கதிர்காமநாதன் கோகிலவாணியும்
தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாக தெரிவுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சிவானந்தன் ஜெனிற்றா இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
எமது சங்கம் 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை நேர்த்தியாக வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இயங்கி வருகிறது.

இரண்டு வருட காலமாக தனி நபர்கள் பிரச்சனைகளால் ஒருவர் பிரிந்து சென்று அதனை மழுங்கடிக்கும் நோக்கோடு செயற்படுகிறார். அமைப்பு எப்பொழுதும் அமைப்பாக தான் இருக்கும். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் என்பது அமைப்பாகவே இருக்கும். அதில் இருக்கும் நபர்கள் மாறிச் செல்லலாம். அதன் அமைப்புக்காக உருவாக்கப்பட்ட சின்னத்தையோ கடிதத் தலைப்பையோ தனி நபர்கள் உரிமை கோரமுடியாது

இன்று நான் இருப்பேன். நாளை வேறு ஒருவர் இருப்பார். தொடர்ச்சியாக அங்கத்தவர்கள் மாறிச் செல்வார்கள். அந்த சின்னத்தையும் கடிதத் தலைப்பையும் எவரும் உரிமையாக்க முடியாது. இந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளை ஒன்று சேர்த்தது இந்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம்.

கடிதத் தலைப்பு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  சங்கத்துக்குரியது. அதனை தனிநபர் பாவித்து தனக்கென உரிமை கோரக்கூடாது என்பதை இன்றைய தினத்தில் கூறிக் கொள்கிறோம்.

இதை சர்வதேச மட்டத்திலும் இங்குள்ள அமைப்புகளுக்கும், இங்குள்ள பொது மக்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தனி நபர்கள் இதனை பாவிக்க கூடாது என்பதையும் ஒட்டுமொத்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கமாக கூறிக் கொள்கிறோம்.

எதிர்காலங்களில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தோடு சேர்த்து அனைத்து உறவுகளும் அனைத்து பொது மக்களும் அனைத்து சிவில் அமைப்புகளும் தொடர்ச்சியாக கடந்த கால கடந்த காலங்களில் மாபெரும் போராட்டங்களை நடத்தி எவ்வாறு சர்வதேச நீதிக்காக போராடியிருந்தோமோ அதே போன்று தொடர்ச்சியாக செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி யோகராஜா கனகரஞ்சினி கருத்து தெரிவிக்கையில்,

எமது சங்கத்தின்  செயலாளராக இருந்து ஆனந்தநடராஜா லீலாதேவி இரண்டு வருட காலத்துக்கு மேலாக எங்களோடு இணைந்து செயல்படாது இருந்தார்.
அவருடன் பேசி அவரையும் இணைத்து பயணிப்பதற்கு எவ்வளவோ பிரயத்தனம் மேற்கொண்டும் அவர் மறுப்பு தெரிவித்தார். ஆகையால் எங்களுடைய உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தை  முன்கொண்டு செல்வதற்கும் எங்களுடைய உறவுக்கான சர்வதேச நீதியை பெறுவதற்கும் எங்களுக்கு சரியான கட்டமைப்பும் நிர்வாகமும் தேவை. அதற்காகவே புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது – என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles