பதவி உயர்வில் அதிருப்தியடைந்த பொலிஸ் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதால் பதவி உயர்வுகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு தாமதம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே பதில் பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் தலைமையகம் என்பன சட்டமா அதிபர் திணைக்களத்துடன் ஏற்கனவே பல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இதன் மூலம் இந்தப் பிரச்சினைகள் மிக விரைவாக தீர்க்கப்படும்.
மேலும், கடந்த காலங்களில் பொலிஸ் கனிஷ்டதர அதிகாரிகளுக்கு பல பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. அவ்வாறே எதிர்காலத்திலும் உரிய பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

