நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (09) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர்களுக்கு விசேட கொடுப்பனவாக 35,000 ரூபாய் வழங்க அமைச்சரவை தீர்மானித்த நிலையில் ஏனைய சுகாதார தரப்புக்கள் தமக்கும் வழங்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட பத்து சுகாதார பிரிவினர் புதன்கிழமை(10) முதல் 48 மணி நேர பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையினால் வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளிகள் செவ்வாய்க்கிழமை (09) சிரமங்களை எதிர்நோக்கினர் என யெப்னா கலரி செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அரச வைத்தியசாலைகளின் இரசாயன ஆய்வுக்கூட ஊழியர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துள்ளனர்.
எனினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு நீரிழிவு வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலைகளின் அத்தியாவசிய சேவைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என நிறைவுகாண் மருத்துவ ஊழியர்களின் கூட்டு ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

