“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டி இல்லாத தலைவர் தெரிவும், சகல உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்த மாநாடும் நடைபெற வேண்டும். கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி எவ்வாறு பலமாக இருந்ததோ அதே போன்ற நிலைமை தொடர வேண்டும். நாம் தொடர்ந்தும் பலத்துடன் இருக்க வேண்டும். கட்சிக்குள் போட்டிகள் வந்தால் அது கட்சியையும், உறுப்பினர்களையும் பலவீனப்படுத்தும்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (09)நேரில் சந்தித்துப் பேசியபோதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு மற்றும் தேசிய மாநாடு தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் புதன்கிழமை (10) பிற்பகல் 3 மணிக்குக் கொழும்பில் உள்ள சம்பந்தன் எம்.பியின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்பதாக நாடாளுமன்ற வளாகத்தில் சிறீதரன் எம்.பியை நேரில் சந்தித்துக் கட்சியின் ஒற்றுமைப் பயணம் தொடர்பில் பெருந்தலைவர் சம்பந்தன் எம்.பி. பேசினார்.
“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியின் தேசிய மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும். இந்நிலையில், புதிய தலைவர் தெரிவு போட்டி இல்லாமல் நடைபெறும் நிலைமையை ஏற்படுத்த முடியாதா?” – என்று இதன்போது சிறீதரனிடம் சம்பந்தன் வினவினார்.
“உங்கள் வீட்டில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெறும்தானே ஐயா. அதில் இது தொடர்பில் தீர்மானம் எடுப்போம்” – என்று சிறீதரன் பதிலளித்தார் எனவும் அறிய முடிகிறது.

