யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் இரு வீட்டாருக்கு இடையே இருந்த பாதை முரண்பாட்டால் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு வீட்டாருக்கும் இடையே பாதை தொடர்பான முரண்பாடுகள் இருந்துள்ளன. அதில் ஒரு வீட்டின் உரிமையாளர் ஆறு மாதங்களின் முன்னர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு தரப்பினரின் இரு மோட்டார் சைக்கிள்களை மற்றொரு தரப்பு தீயிட்டு எரித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
அதையடுத்து மோட்டார் சைக்கிளைத் தீயிட வந்தவர்களில் ஒருவரின் மோட்டார் சைக்கிளை மற்றைய தரப்பு தீயிட்டு எரித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் எரிப்புடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகி உள்ள நிலையில் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

