29.5 C
Colombo
Friday, August 21, 2026

வடக்கில் புயல் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு – மீனவர்களுக்கும் எச்சரிக்கை.

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாற்றமடையுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாழமுக்கமானது நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்க்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி அளவில் குஜராத் மற்றும் பாகிஸ்தான் கடற்பிராந்தியங்களை ஊடறுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இந்த தாழமுக்கமானது புயலாக வலுவடையும் வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கொழும்பு வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படுமென அறிவிக்கபட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு முதல், காலி அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படுமென குறிப்பிடபட்டுள்ளது.

இதன் காரணமாக காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கொழும்பு வரையிலான கடற்பிராந்தியங்களுக்கு கடற்றொழிலாளர்களை செல்ல வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

மேலும், ஏனைய கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்ப்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

அத்துடன், கடற்பிராந்தியங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை காணப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, நுவரெலிய மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் இடியுடன்கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles