யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் யமுனா வீதியில் அமைந்துள்ள மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் முன்பாக கூடிய உத்தியோகத்தர்கள் நேற்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் அடையாளமாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள் சங்கத்திற்குரிய கடிதத் தலைப்பில் 2025.07.20 திகதியிட்டு ஆணையாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்ட கடிதம் ஊடாக யாழ் மாவட்ட உதவி ஆணையாளருக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் அவமரியாதை ஏற்படுத்தும் முகமாக அலுவலக நடைமுறைக்கு பிறழ்வான கீழ் தரமான சொற்பிரயோகங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி கடிதம் தொடர்புடைய அனைவருக்கும் முகவரியிடப்பட்டு குறித்த தொழிற்சங்கத்தால் மீளப் பெறப்படல் வேண்டும். அல்லது குறித்த சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் இரண்டு உத்தியோகத்தர்களையும் மாவட்டத்திற்கு வெளியில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன் சாதகமான பதில் வரும் வரை இன்று தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

