எமக்கு நிவாரணமும் வேண்டாம் வாழ்வாதாரமும் வேண்டாம் எமது பிள்ளைகளை தாருங்களென
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் யாழ் மாவட்ட இணைப்பாளர் சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.
நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு போராட்டங்கள் இடம்பெறுவது வழமை. இந்நிலையில் இம்முறை கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கினால் எம்மால் வீதியில் இறங்க முடியாதுள்ளது.
காணாமல்போனவர்களுக்கான அலுவலகம் எமக்கு தேவையில்லை. இரவு வேளைகளில் திருட்டுத்தனமாக காணாமல்போனவர்களுக்கான அலுவலகங்களை திறக்க வேண்டாம். எமக்கு நிவாரணமும் வேண்டாம். வாழ்வாதாரமும் வேண்டாம் எமது பிள்ளைகளை தாருங்கள்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் எமது பிள்ளைகளை சர்வதேசத்திடம் கண்டுபிடித்துதருமாறு கேட்கிறேன். கொரோனா காலத்து 5 ஆயிரமும் 2 ஆயிரமும் வேண்டாம் பிள்ளைகளைத் தாருங்கள்.எங்களின் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் உழைத்து எங்களுக்கு சாப்பாடு தருவார்கள்.
எங்களுக்கு உடலளவில் தளர்வு இருந்தாலும் மனதளவில் நாம் இன்னமும் திடமாகவே இருக்கிறோம்.எமது பிள்ளைகள் கிடைக்கும்வரை தொடர்ந்தும் போராடுவோம் என்றார்.

