யாழ்ப்பாணத்திற்கு வியாழக்கிழமை (11) விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்டவர்களின் வருகை தொடர்பிலான செய்தி சேகரிப்புக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள சில வலையொளி அலைவரிசை (YouTube Channel) வைத்திருப்போர் உள்ளிட்ட நால்வருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வியாழக்கிழமை விஜயம் செய்தார்.
இந்நிலையில் இளவரசி விஜயம் செய்யும் இடங்களில் பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை.
அதேவேளை வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும் அனுமதியளிக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது யாழ்ப்பாணத்தில் இயங்கும் அறக்கொடை நிலையம் ஒன்றின் ஊடகப் பொறுப்பாளரே நான்கு பெயரை தமக்கு சிபாரிசு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

