பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக சுந்தரம் அருமைநாயகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரை நியமிக்க இலங்கையின் நாடாளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக சுந்தரம் அருமைநாயகத்தை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 25ஆம் திகதி கூடிய நாடாளுமன்ற பேரவையில் இணக்கம் காணப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து ஜீவன் தியாகராஜா ராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நாடாளுமன்ற பேரவையும் இணக்கம் தெரிவித்துள்ளது.
இவர் இதற்கு முன்னர் வட மாகாண ஆளுநராக கடமையாற்றியதுடன் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராகவும் சுங்கப் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.

