கடந்த நூறு ஆண்டுகளுக்கும் அதிகமாக புனரமைக்கப்படாமல் இருந்த கிராஞ்சி, வேரவில் மற்றும் பொன்னாவெளி, வலைப்பாடு போன்ற கிராமங்களுக்கான பிரதான போக்குவரத்து வீதியின் முதலாவது கட்ட புனரமைப்பு பணிகள் திருப்திகரமாக அமைந்துள்ளதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வீதிப் புனரமைப்பு மற்றும் பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சீமேந்து தொழிற்சாலை மற்றும் சுண்ணாம்பு கல் அகழ்வு தொடர்பான ஆய்வுகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த வீதியின் புனரமைப்பு பணிகளை பொறுப்பேற்றுள்ள டோக்கியோ சீமேந்து நிறுவனம் முதலாவது கட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் விரைவில் மீண்டும் தொடருவதற்கு எதிர்பாரப்பதாகவும் தெரிவித்துள்ள அதாகாரிகள், டோக்கியோ நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள வீதி வடிகாலமைப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, 2 மற்றும் 3 ஆம் கட்டப் புனரமைப்பு பணிகளும் எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு டோக்கியோ நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொன்னாவெளி கிராமத்தில் சுமார் 1200 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சுண்ணக்கல் ஆய்வு பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், புவிச்சரித்திரவியல் சுரங்கங்கள் பணியகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக, நீர் வழங்கல் அமைச்சினால் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வடக்கின் பிரதம செயலாளருக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

