அரச உத்தியோகத்தர்கள் தமது அலுவலகப் பணிகளுக்கு அப்பாலும் பொதுமக்களுக்கான மனிதாபிமான பணிகளை ஆற்றுவதற்கு முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ள யாழ்.அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன், மக்களுக்கு நேர்மையான முறையில் பணியாற்றுவதன் மூலமே சேவையில் இருந்து ஓய்வுபெறும்போது மனத் திருப்தியுடன் செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.
நெருக்கடியான காலகட்டங்களில் சமூகப் பொறுப்பை உணர்ந்து பணியாற்றக்கூடிய மன நிலை அரச உத்தியோகத்தர்களுக்கு இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், தற்போது யாழ்.மாவட்டத்தில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் அரச பணியாளர்கள் குருதிக்கொடை செய்ய முன்வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தால், அரச உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறண் தடைகாண் பரீட்சைக்கான வழிகாட்டல் செயலமர்வு நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் (25) ஆரம்பிக்கப்பட்டபோது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அரச அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
சங்கத் தலைவர் வி.விஜயரூபன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் யாழ்.மாவட்டத்தின் பல பிரதேச செயலகங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இங்கு அரச அதிபர் மேலும் உரையாற்றுகையில், அரச உத்தியோகத்தர்கள் அலுவலக நேரங்களில் மக்கள் சேவையில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். உத்தியோகத்தர்கள் அலுவலகங்களில் வீண் பொழுது போக்குகின்றார்கள் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் ஏற்படக்கூடாது. அலுவலகத்திற்கு வருகின்ற வயோதிபர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுக்கவேண்டும்.
அரச பணிக்கு வருகின்ற அனைவரும் ஏதோ ஒரு துறையில் படித்தவர்கள். அவர்கள் பண்பாக செயற்பட வேண்டும். பொதுமக்கள் மனங்களில் இடம்பிடிக்கத்தக்க செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும். அலுவலக உத்தியோகத்தர்களோ ஆசிரியர்களோ வேறேந்த துறைசார்ந்தவர்களோ தமது பணியுடன் மட்டும் நின்றுவிடாமல் மக்களுக்கான மனிதாபிமான செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டும்.
யாழ்.மாவட்டத்தில் குருதிக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் நாம் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் குருதிக்கொடை செய்வதற்கு முன்வரவேண்டும். வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் இப்பணியை மேற்கொள்ள வேண்டும். மக்கள் சேவை மகேசன் சேவை என வாய்வழியாகக் கூறிவிட்டு இருக்காமல் அதை செயலில் காட்டவேண்டும். – எனத் தெரிவித்தார்.
இந்தச் செயலமர்வில் யாழ். மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள், வளவாளர்கள் போன்றோர் உட்பட நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

