29.5 C
Colombo
Friday, August 21, 2026

மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை உருவாக்குதல்!

இந்தியாவின் புது தில்லியில் அண்மையில் இடம்பெற்ற AI தாக்க உச்சிமாநாடு 2026 (AI Impact Summit 2026) இல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை 

மனித வரலாற்றின் ஒரு முக்கிய தருணத்தில், உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் நடைபெற்ற ‘AI தாக்க உச்சிமாநாடு 2026’-ல் (AI Impact Summit 2026) ஒன்றிணைந்தன. பல்வேறு நாடுகளின் அரசுத் தலைவர்கள், அரசாங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை வரவேற்பது இந்தியாவுக்குப் பெருமிதமும் மட்டற்ற மகிழ்ச்சியும் அளிக்கும் ஒரு தருணமாக அமைந்தது.

இந்தியா தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் பிரம்மாண்டத்தையும் உத்வேகத்தையும் வெளிப்படுத்துகின்றது; இந்த உச்சிமாநாடும் அதற்கு விதிவிலக்கல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இங்கு ஒன்றுகூடினர். தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாளர்கள் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்புகளையும் சேவைகளையும் காட்சிப்படுத்தினர். கண்காட்சி அரங்குகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் கேள்விகளை எழுப்புவதையும், புதிய சாத்தியக்கூறுகளைக் கற்பனை செய்வதையும் காண முடிந்தது. அவர்களின் ஆர்வம், இதனை உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஜனநாயகமயமான AI உச்சிமாநாடாக மாற்றியது. இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் இது ஒரு முக்கியமான தருணமாக நான் கருதுகிறேன், ஏனெனில் AI கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டிற்கான ஒரு மக்கள் இயக்கம் இப்போது உண்மையிலேயே தொடங்கியுள்ளது.

மனித வரலாறு, நாகரிகத்தின் போக்கை மாற்றியமைத்த பல தொழில்நுட்ப புரட்சிகளைக் கண்டுள்ளது. நெருப்பு, எழுத்து, மின்சாரம் மற்றும் இணையம் ஆகியவற்றுக்கு நிகரான ஒரு முக்கியத்துவத்தை செயற்கை நுண்ணறிவும் (AI) பெற்றுள்ளது. ஆனால், மற்ற தொழில்நுட்பங்களில் பல தசாப்தங்களாக நிகழ்ந்த மாற்றங்கள், செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை ஒரு சில வாரங்களிலேயே அரங்கேறி ஒட்டுமொத்த உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டவை.

AI இயந்திரங்களுக்கு அறிவாற்றலை வழங்குகிறது; ஆனால் அதைவிட முக்கியமாக, அது மனித எண்ணங்களை பன்மடங்கு வலுப்படுத்தும் ஒரு கருவியாகும் (force multiplier). எனவே, AI-யை இயந்திரங்களை மையமாகக் கொண்டதாக அல்லாமல் மனிதர்களை மையமாகக் கொண்டதாக மாற்றுவது மிகவும் அவசியம். இந்த உச்சிமாநாட்டில், ‘சர்வஜன ஹிதாய, சர்வஜன சுக்காய’ (அனைவருக்கும் நலம், அனைவருக்கும் மகிழ்ச்சி) என்ற கோட்பாட்டின் அடிப்படையில், மனித நலனை உலகளாவிய AI விவாதங்களின் மையப்பொருளாக மாற்றியுள்ளோம்.

 

தொழில்நுட்பம் எப்போதும் மனிதர்களுக்குச் சேவை செய்ய வேண்டுமே அன்றி, மனிதர்கள் தொழில்நுட்பத்திற்காக அல்ல என்பது என் நிலையான நம்பிக்கை. UPI வழியிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையாக இருந்தாலும் சரி, COVID தடுப்பூசி செலுத்துவதாக இருந்தாலும் சரி, எமது டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பானது (Digital Public Infrastructure) அனைவரையும் சென்றடைவதை நாம் உறுதி செய்துள்ளோம். இந்த உச்சிமாநாட்டிலும் அதே உத்வேகத்தை என்னால் காண முடிந்தது, குறிப்பாக வேளாண்மை, பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான (Divyangjan) உதவி மற்றும் பன்மொழி பேசும் சமூகங்களுக்கான தொழில்நுட்பக் கருவிகள் போன்ற துறைகளில் நமது கண்டுபிடிப்பாளர்களின் பணிகள் அதனைப் பிரதிபலித்தன.

இந்தியாவில் AI-யின் சக்திவாய்ந்த வலுப்படுத்தும் திறனை ஏற்கனவே பல எடுத்துக்காட்டுகள் நிரூபித்துள்ளன. சமீபத்தில், இந்திய பால்வளக் கூட்டுறவு நிறுவனமான அமுல் (AMUL), ‘சரளாபென்’ (Sarlaben) எனும் AI-ஆல் இயங்கும் டிஜிட்டல் உதவியாளரை அறிமுகப்படுத்தியது. இது பெரும்பாலும் பெண்களை உள்ளடக்கிய 3.6 மில்லியன் பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறன் குறித்த வழிகாட்டுதல்களை அவர்களின் சொந்த மொழியிலேயே உடனுக்குடன் வழங்கி வருகிறது. அதேபோல், ‘பாரத் விஸ்தார்’ (Bharat VISTAAR) எனப்படும் AI தளம், வானிலை முதல் சந்தை நிலவரம் வரை பல்வேறு தகவல்களை பன்மொழிகளில் வழங்கி, விவசாயிகளை வலுப்படுத்துகிறது.

மனிதர்கள் ஒருபோதும் இயந்திரங்களுக்கான வெறும் தரவுப் புள்ளிகளாகவோ (Data points) அல்லது மூலப்பொருட்களாகவோ மாறிவிடக் கூடாது. மாறாக, உலகளாவிய தெற்கு (Global South) நாடுகளின் முன்னேற்றத்திற்கான வாயில்களைத் திறக்கும் ஒரு பொதுநலக் கருவியாகவே AI அமைய வேண்டும். இந்த தொலைநோக்குப் பார்வையைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் வகையில், மனித மையப்படுத்தப்பட்ட AI நிர்வாகத்திற்கான ‘மானவ்’ (MANAV) கட்டமைப்பை இந்தியா முன்மொழிந்துள்ளது.

M – Moral and Ethical Systems (அறநெறி மற்றும் ஒழுக்கக் கோட்பாடுகள்): AI, தெளிவான அறநெறி வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைய வேண்டும்.

A – Accountable Governance (பொறுப்புமிக்க நிர்வாகம்): வெளிப்படையான விதிமுறைகள் மற்றும் வலுவான கண்காணிப்பு நடைமுறைகளை உறுதி செய்தல்.

N – National Sovereignty (தேசிய இறையாண்மை): தரவுகளின் மீதான ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைகளுக்கு மதிப்பளித்தல்.

A – Accessible and Inclusive (அணுகத்தக்கதும் அனைவரையும் உள்ளடக்கியதும்): AI ஒரு சிலரின் முற்றுரிமையாக (Monopoly) இருக்கக் கூடாது; அது அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

V – Valid and Legitimate (சட்டபூர்வமான மற்றும் அங்கீகரிக்கப்பட்டவை): AI தொழில்நுட்பமானது சட்டங்களுக்கு உட்பட்டதாகவும், சரிபார்க்கத்தக்கதாக (verifiable) இருக்க வேண்டும்.

‘மனிதன்’ என்று பொருள்படும் ‘மானவ்’ (MANAV) கட்டமைப்பு, 21-ஆம் நூற்றாண்டில் AI-யை மனித விழுமியங்களோடு பிணைப்பதற்கான அடிப்படை அறநெறிகளை வழங்குகிறது.

நம்பிக்கைதான் AI-யின் எதிர்காலம் நிலைத்திருப்பதற்கான அடித்தளம். உருவாக்கும் (Generative) தொழில்நுட்பங்கள் உலகைத் தகவல்களால் நிரப்பி வரும் வேளையில், டீப்ஃபேக் (Deepfakes) மற்றும் தவறான தகவல்களால் ஜனநாயகச் சமூகங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன. உணவுப் பொருட்களுக்கு ஊட்டச்சத்து விவரங்கள் இடம்பெறுவதைப் போலவே, டிஜிட்டல் உள்ளடக்கங்களிலும் அவற்றின் உண்மைத்தன்மை குறித்த சான்றுகள் (Authenticity labels) இருக்க வேண்டும். டிஜிட்டல் உள்ளடக்கங்களின் நீர் அடையாளங்கள் (Watermarking) மற்றும் அவற்றின் மூலத்தை உறுதிப்படுத்துவதற்கான பொதுவான தரநிலைகளை உருவாக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்கு (Synthetically generated content) தெளிவான லேபிளிங் முறையை சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கியதன் மூலம், இந்தியா ஏற்கனவே இந்தத் திசையில் ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது.

நமது குழந்தைகளின் நலன் என்பது நமது இதயத்திற்கு நெருக்கமான ஒரு விஷயமாகும். உலகம் முழுவதும் கல்வி முறையில் நாம் எந்த அளவு அக்கறை காட்டுகிறோமோ, அதேபோன்று குடும்பத்தின் வழிகாட்டுதலுடனும் பொறுப்புணர்வுடனும் கூடிய ஈடுபாட்டை ஊக்குவிக்கும் பாதுகாப்பு அம்சங்களுடன் AI அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

தொழில்நுட்பம் ஒரு உத்தேசச் சொத்தாக (Strategic asset) பாதுகாக்கப்படுவதை விட, அது அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்படும்போது தான் மகத்தான பலன்களைத் அளிக்கும். திறந்தநிலைத் தளங்கள் (Open platforms) கோடிக்கணக்கான இளைஞர்களை தொழில்நுட்பத்தை பாதுகாப்பானதாகவும், மனித மையப்படுத்தப்பட்டதாகவும் மாற்றுவதில் பங்களிக்க உதவும். இந்த ஒட்டுமொத்தக் கூட்டு அறிவாற்றலே (Collective intelligence) மனிதகுலத்தின் மிகப்பெரிய பலமாகும். AI என்பது உலகளாவிய பொதுநலனாக (Global common good) வளர வேண்டும்.

மனிதர்களும் புத்திசாலித்தனமான தொழில்நுட்ப அமைப்புகளும் இணைந்து உருவாக்கும், இணைந்து பணியாற்றும், மற்றும் இணைந்து வளர்ச்சியடையும் ஒரு புதிய யுகத்திற்குள் நாம் நுழைகிறோம். முற்றிலும் புதிய தொழில்கள் உருவாகும். இணையம் தொடங்கப்பட்டபோது, அது உருவாக்கும் சாத்தியக்கூறுகளை யாரும் கற்பனை செய்ய முடியவில்லை. ஆனால், அது எண்ணற்ற புதிய வாய்ப்புகளை உருவாக்கியது; அதேபோல் AI-யும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

வலுவூட்டப்பட்ட நமது இளைஞர்களே AI யுகத்தின் உண்மையான முன்னோடிகளாக திகழ்வார்கள் என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன். உலகின் மிகப்பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட திறன் மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுத்து, திறன் வளர்ப்பு (Skilling), திறன் மேம்பாடு (Reskilling) மற்றும் வாழ்நாள் முழுவதுமான கற்றல் ஆகியவற்றை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.

உலகின் மிகப்பெரிய இளைஞர் சக்தியையும், தொழில்நுட்ப திறமையாளர்களையும் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. எமது ஆற்றல் மற்றும் தெளிவான கொள்கை முடிவுகளின் மூலம், AI-யின் முழுமையான சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் தனித்துவமான நிலையில் நாம் உள்ளோம். இந்த உச்சிமாநாட்டில், இந்திய நிறுவனங்கள் நமது நாட்டின் சொந்தத் தயாரிப்பான (Indigenous) AI மாதிரிகளையும் செயலிகளையும் அறிமுகப்படுத்தியதைக் கண்டு நான் பெருமிதம் அடைந்தேன். இது நமது இளம் கண்டுபிடிப்பாளர்களின் ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவைப் பிரதிபலிக்கிறது.”

நமது AI சூழலமைப்பின் (AI Ecosystem) வளர்ச்சியை ஊக்குவிக்க, ஒரு வலுவான உள்கட்டமைப்பு அடித்தளத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ‘இந்தியா AI மிஷன்’ (India AI Mission) திட்டத்தின் கீழ், ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஜி.பி.யு-க்கள் (GPUs) நிறுவியுள்ளோம்; மேலும் பல விரைவில் நிறுவப்படவுள்ளன. உலகத்தரம் வாய்ந்த கணினித் திறனை (Computing power) மிகவும் மலிவான விலையில் அணுகுவதன் மூலம், சிறிய ஸ்டார்ட்அப்புகளுக்குக் (Startups) கூட உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், தரவுத் தொகுப்புகள் (Datasets) மற்றும் AI மாதிரிகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ‘தேசிய AI களஞ்சியத்தை’ (National AI Repository) நாங்கள் நிறுவியுள்ளோம். செமிகண்டக்டர்கள் மற்றும் தரவு உள்கட்டமைப்பு முதல், துடிப்பான ஸ்டார்ட்-அப்கள் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி வரை, ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலியிலும் (Value chain) நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்தியாவின் பன்முகத்தன்மை, ஜனநாயகம் மற்றும் மக்கள்தொகை ஆற்றல் ஆகியவை உள்ளடக்கிய கண்டுபிடிப்புகளுக்கு (Inclusive innovation) ஏற்ற சூழலை வழங்குகின்றன. இந்தியாவில் வெற்றி பெறும் தீர்வுகள், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் பயன்படும். அதனால்தான் உலக நாடுகளுக்கு நாங்கள் விடுக்கும் அழைப்பு இதுதான், ‘இந்தியாவில் வடிவமைத்து மேம்படுத்துங்கள்’ (Design and develop in India). உலகுக்கு வழங்குங்கள்; ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் வழங்குங்கள்.

நரேந்திர மோடி

(இந்தியப் பிரதமர்)

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles