28.9 C
Colombo
Friday, August 21, 2026

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க மறுப்பு!

யாழ்ப்பாணம் – தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு, திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு கொழும்பில் நேற்றுக் கூடிக் கலந்துரையாடல் நடத்தியுள்ளது. இதன்போதே, திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளை பகுதியளவேனும் விடுவிப்பதற்கு திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

அந்தக் காணி முற்றுமுழுதாக விகாரைக்குச் சொந்தம் என்பதால், அதை விடுவிக்கும் எண்ணம் இல்லை என்றும், அவ்வாறு விடுவிப்பது பொருத்தமாக இருக்காது எனவும் அவர்கள் அந்தக் கலந்துரையாடலில் கூறியுள்ளனர்.

திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க பகுதியைத் தவிர, ஏனைய காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்திருந்தன. விடுவிப்புக்காக காணி அளவீடுகள் இடம்பெறுகின்றன என்றும் கூறப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே, பகுதியளவேனும் காணிகளை விடுவிப்பதற்கு தற்போது திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது.

பௌத்த சாசன அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அரச அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles