செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தை ஸ்கான் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சில் இருந்து அனுமதி கிடைக்க தாமதமாவதால் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் சித்துப்பாத்தி மயானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை ஸ்கான் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 24 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,இந்த தளத்தை ஸ்கான் செய்வதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்ட வகையில் பாதுகாப்பு அமைச்சினால் குறிக்கப்பட்ட கருவிக்கு அனுமதி கொடுக்கப்படாத காரணத்தினால் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் துறையின் உதவியுடன் எதிர்வரும் திங்கட்கிழமை அதே வகையான ஸ்கானர் கருவியை கொண்டு இந்த பிரதேசம் ஸ்கான் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு குறிக்கப்பட்ட கருவியின் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தாமதமாவதன் காரணமாக பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட பகுதி ஊடாக இதை கொண்டு வருவது இலக்கு என்ற அடிப்படையிலும் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் தொடர்பு உள்ளது காரணத்தினால் நிபுணர்கள் பல்கலைக்கழகத்தினுடைய உதவியை நாடி இந்த விடயத்தை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர் – என்றார்.

