செம்மணி மனித புதைகுழியில் குழந்தை மற்றும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளடங்கலாக எட்டு மனித எலும்புக்கூடுகள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழி வழக்கின் 17ஆம் நாள் நேற்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், தொல்லியல் துறை மாணவர்கள் தடயவியல் பொலிஸார், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதவா குழுவினர்,சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் அகழ்வு நடைபெற்றது.
17ஆம் நாள் அகழ்வின் போது கண்ணுக்கு தெரியும் வகையில் ஆறு வரையான சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
இதேவேளை நேற்றைய அகழ்வில் சிறிய போத்தலை ஒத்த தடயப் பொருளொன்று அவதானிக்கப்பட்டுள்ளது. அது முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னரே அது என்ன பொருள் என்று தெரியவரும்.

