28.9 C
Colombo
Friday, August 21, 2026

சுமந்திரனை தோற்கடித்தால் எனக்கு அமைச்சுப் பதவியா? அது ஊகம் என்கிறார் அங்கஜன்

“சுமந்திரனை தோற்கடித்தால் எனக்கு அமைச்சுப் பதவி தரப்படும்” என்ற தகவல் வெறும் ஊகத்தின் அடிப்படையிலானது என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இதனை தற்போது சுமந்திரன் கூறுவது அவரின் கல்வி அறிவையும், பதவியின் நிலையும், அரசியல் ஞானத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது சமூக வலைத்தளம் ஊடாக வெளியிட்ட காணொளி தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், தற்போது சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக ஏற்படும் கருத்துருவாக்கங்களுக்குப் பின்னால், புதிய இளைஞர்களை தன்னுடன் ஈர்த்துக் கொள்ளவும், அரசியல் ரீதியாக தனக்கு வேண்டிய இலக்கினை அடைவதற்காகவும் மேற்கொள்ளப்படும் முயற்சியை ஒரு புதிய பாணியாகக் காணலாம். இந்த முயற்சிக்காக முதலில் நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், தனது கருத்துக்களின் ஊடாக மற்றவர்களை தாக்கி, தனது எதிர்ப்பாளிகளுக்கு எதிரான மனநிலையில் வெள்ளையடிப்பு செய்யும் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் வாக்குகளை குறித்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பேசுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது? 2020ஆம் ஆண்டு நிகழ்ந்த விடயங்களை 2025ஆம் ஆண்டில் உரைக்கும்போது, “சுமந்திரனை தோற்கடித்தால் எனக்கு அமைச்சுப் பதவி தரப்படும்” என்ற தகவல் வெறும் ஊகத்தின் அடிப்படையிலானது. இது கௌரவ சுமந்திரன் அவர்களின் கல்வி அறிவையும், பதவியின் நிலையும், அரசியல் ஞானத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

வாக்கெண்ணும் நிலையத்தில் அன்றைய தினம் நிகழ்ந்த அசாதாரண சூழ்நிலைக்கு காரணம், சுமந்திரன் அவர்களே என்பதை மறுக்க இயலாது. மக்கள் தலைவர் என்பவன் சூழ்நிலையை உணர்ந்து நடப்பவராக இருக்க வேண்டும். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அவர் அது போல நடந்துகொள்ளவில்லை என்பதும் தெளிவாகிறது.

தொடர்ந்து, நான் அன்று சசிகலா அவர்களின் வீட்டிற்கு சென்றதற்கான காரணம், அன்றைய தினம் மாலை எனது சாவகச்சேரி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட என் பணிகளை கௌரவிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காகவேயாகும். அந்த நிகழ்விற்கு முன்னர், அமரர் ரவிராஜ் அவர்களின் சிலையின் முன் பெண் ஒருவர் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு, என் ஆதரவாளர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த மக்களின் கோரிக்கையின் பேரில் நான் அங்கு சென்றேன். அங்கு சென்றபோது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் வட மாகானசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரும் அங்கு உரையாடிக் கொண்டிருந்தனர்.

நான் அங்கு சென்றது பதவிக்காகவாயின், அங்கு தங்களது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏன் இருந்தனர் என்பதை விளக்க முடியுமா? அவர்களிடம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தங்களது கட்சி தலைமை தவறியதற்கு என்ன காரணம்?

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த திறமையானவர்களும், ஆளுமை வாய்ந்தவர்களும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே என் நிலைப்பாடாகும். எனவே, பசில் கூறியதுபோன்று, வெறும் ஊகத்தின் அடிப்படையில் எனது வருகையை கருத்தினை திரிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நான் ஏற்கனவே 2018ஆம் ஆண்டு விவசாய பிரதி அமைச்சராக பதவியில் இருந்துள்ளேன்.

தென்மராட்சி பகுதிக்குரிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துவிட்டோம் என்ற மக்களின் ஏக்கம் குறித்து, நான் சட்ட ரீதியாக செய்யக்கூடிய உதவிகளை செய்வதாகவும், மக்களின் பிரதிநிதியாகவும்  தெரிவித்திருந்தேன்.

மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளித்து அமைதியாக இருக்கும் எம்மை சுமந்திரன் அவர்கள் தொடர்ந்து சாடுவது எங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அவர் மக்களின் தீர்ப்பை மதிக்க கற்றுக்கொள்வது அவசியம். கடந்த காலத்தில் தன்னைக் குறித்த மக்களின் விமர்சனங்களுக்கு பதிலாக, மற்றவர்களை குறை கூறும் கீழ்த்தர அரசியலை அவர் நிறைவு செய்ய வேண்டும்.

மக்களின் தீர்ப்பை மதிக்காவிட்டாலும், எம்மை வம்புக்கு இழுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். உதவி செய்ய இயலாத நிலையில் இருந்தாலும், குறைந்தது தொந்தரவு செய்யாமல் இருப்பதே மக்கள் எதிர்பார்க்கும் பண்பாகும் – என்றுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles