28.9 C
Colombo
Friday, August 21, 2026

ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு

எதிர்காலத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகள் இன்றி, ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்த அனைத்து தலைவர்களுக்கு சிலைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழப் போராட்ட வரலாற்றில் உயிர் தியாகம் செய்த முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு இன்றைய தினம் , யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள சிவகுமாரனின் நினைவு சதுக்கத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து , சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் , அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், போராளிகள், மக்கள் எனப் பலரும் நினைவுகூரப்பட வேண்டியவர்களாக உள்ளனர். அவர்களது நினைவேந்தல்களை செய்வதற்கான ஏற்பாடுகளும் குறிப்பாக அவர்களது நினைவுச் சிலைகள் நிறுவப்படுவது அவசியமாகும்.

இதில் கட்சி பேதங்களோ இயக்க வேற்றுமைகளோ இருக்கப்போவதில்லை.  பொன் சிவகுமாரனது உருவச்சிலை தற்போதுள்ள உருவச்சிலை நிறுவப்படுவதற்கு முன்னர் மூன்று தடவைகள் உடைத்தெறியப்பட்டது. இதற்கு சரியான புரிதல் இன்மையே காரணம் என்று  நினைக்கின்றேன்.

ஆனால் 1999 களில் அன்றைய அரசுடன் எமக்கிருந்த நல்லுறவு, எமது தேசிய நல்லிணக்க வழிமுறை என்பவற்றுடன் எமக்கிருக்கும் தற்துணிவுமே இந்த சிலையை அமைப்பதற்கும் தலைநிமிர்ந்திருக்க முக்கிய காரணமாக உள்ளது.

அதுபோலதான் யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்திலுள்ள மன்னர்களது சிலைகள், முத்திரைச்சந்தியிலுள்ள சங்கிலியன் சிலை, யாழ்.மடத்தடியிலுள்ள தனிநாயகம் அடிகளார் சிலை போன்றனவும் நிறுவப்பட்டன.

இதேநேரம் பொன் சிவகுமாரனது நினைவு நாளான இன்று தமிழர் அரசியல் பரப்பில் உள்ள பல கட்சியின் தலைவர்கள் முக்கியஸ்தரக்ள் பிரமுகர்கள் என ஒன்றாக கூடியிருப்பதானது இந்நாளை அனைவரும் எமது இனத்தின் ஒரு பொதுவான நாளாக அடையாளப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இருப்பவைகளை பாதுகாத்துக்கொண்டு இழந்தவைகளை ஈடுசெய்யும் வகையில்  முன்னோக்கி நகரவேண்டும் என்று அடிக்கடி  வலியுறுத்துவதை போல,  எமது மக்களின் உரிமைசார் விவகாரங்களிலும் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புக்களை அனைத்து தரப்பினரும் இணைந்து முன்னெடுக்க முடியும்.

அதேபோன்று, எமது மக்களின் இருப்புக்கள் மற்றும் வரலாறுகள் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான முயற்சிகள் அனைத்திற்கும் நாம் முழுமையான ஒத்துழைப்புகளுடன் முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்” என மேலும் தெரிவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles