தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை இந்திய தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள் (NIA) திருச்சி சிறப்பு முகாமில் திங்கட்கிழமை(19) கைது செய்தனர்.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் வகையில் பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்பாக தேசிய புலனாய்வு முகவரகம் ஜூலை 8-ம் திகதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால், தமிழகத்தில் 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள் (NIA)அதிகாரிகள் ஜூலை 20-ம் திகதி சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி சிறப்பு முகாமில், தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள்(NIA) பாதுகாப்புடன் சோதனை நடத்தினர். அப்போது, சிறப்பு முகாமிலிருந்து இலத்திரனியல் பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அவற்றை கேரளா கொண்டு சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், எஸ்.பி. தர்மராஜ் தலைமையில் தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள்(NIA) குழுவினர் நேற்று(19) காலை திருச்சி சிறப்பு முகாமுக்கு வந்து, அங்கிருந்த இலங்கையைச் சேர்ந்த 9 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்தனர். பின்னர் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்கவைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது.
இங்கு இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 132 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

